குடும்பத்தினர் தொந்தரவு இல்லாமல் புகைபிடித்து மது அருந்த வேண்டும் என்பதற்காக சீனாவில் ஒரு நபர் 14 வருடங்களாக வீட்டிற்கே செல்லாமல் விமான நிலையத்திலேயே வசித்து வந்த செய்தி வைரலாகி வருகிறது. இந்த நபர் வசிப்பது சீனாவின் பெய்ஜிங் நகரில். இவரது பெயர் வெய் ஜியாங்குவா. இவருக்கு தற்போது 60 வயது நெருங்குகிறது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2இல் 14 வருடங்களாக வசித்து வருகிறார் வீ ஜியாங்குவோ. 45 வயது இருந்தபோது விமான நிலையத்துக்கு வந்தவர்தான். அன்று முதல் இங்குதான் வசித்து வருகிறார். அரசு கொடுத்து உதவிப் பணத்தை வைத்துக் கொண்டு சாப்பாட்டைக் கவனித்துக் கொள்கிறார். தூங்குவது, குளிப்பது எல்லாமே விமான நிலையத்தில்தானாம். வெய்யின் கதை குறித்து அறிந்த சீன செய்தி நிறுவனம் ஒன்று அவரை அணுகி பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் பேட்டியில் தனது சோகக் கதையை விவரித்துள்ளார் வீ. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த விமான நிலையத்தில் தான் தங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.



எல்லா சூழ்நிலையிலும், கொரோனாவே வந்து உலகை உலுக்கியபோதும், தளராமல் அங்கேயே வாழ்ந்து வருகிறார். 60 வயதை கடந்த அவர், வீட்டிற்குச் சென்றால் நிம்மதியாக புகைபிடிக்க முடியாது, மது அருந்தமுடியாது என்பதற்காக விமான நிலையத்திலேயே தங்கி வருகிறார். ஒரு நாளின் நேரம் என்னவென்று தனக்கு தெரியாது என்றும், எப்போதும் பயணிகளின் கூட்டத்தை சுற்றியே இருப்பதால் எப்போதும் கவலைப்பட்டதில்லை என்றும் ஜியாங்குவோ கூறியுள்ளார்.


"எனக்கு 45 வயது ஆனபோது எனது வேலை போய் விட்டது. நான் பல இடங்களிலும் வேலை தேடினேன். எனது அதிக வயது காரணமாக வேலை கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் உள்ளது. அதை விட்டு விடுமாறு எனது மனைவி கண்டிப்பாக கூறி விட்டார். ஆனால் அது முடியாத காரியம்." என்று கூறுகிறார்.



வீ ஜியாங்குவோ, அருகில் உள்ள காலை சந்தைக்குச் சென்று 6 வேகவைத்த பன்றி இறைச்சி ரொட்டிகள் மற்றும் காலை உணவுக்கு ஒரு கிண்ணம் கஞ்சி, மதிய உணவிற்கு இன்னும் சில உணவுகள் மற்றும் பைஜு எனும் ஒரு சீன மதுபான பாட்டில் ஆகியவற்றை வாங்கி வந்துவிடுவாராம். “வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியாது. நான் வீட்டிலே தங்க வேண்டுமென்றால், நான் புகைபிடிப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும் என்று என் குடும்பத்தினர் என்னிடம் சொன்னார்கள். என்னால் அதைச் செய்ய முடியாவிட்டால், எனது மாதாந்திர அரசு உதவித்தொகையான 1,000 யுவான் (தோராயமாக 12 ஆயிரம் ரூபாய்) அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு மது, சிகரெட்டை நான் எப்படி வாங்குவேன்?” என்று லாஜிக் கேள்வி கேட்கிறார் வீ ஜியாங்குவோ.



மேலும் பேசிய அவர், "என்னால் வீட்டுக்குப் போக முடியாது. அங்கு எனக்கு சுதந்திரமே இல்லை. எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு போடுகிறார் எனது மனைவி. எப்படி சார் நிம்மதியாக வாழ முடியும். எனக்கு எப்போது விடியும், எப்போது இரவு வரும், என்ன நேரம் இப்போது என்று எதுவுமே தெரியாது. பயணிகள் குறைய ஆரம்பித்தால் அது தூங்கப் போக வேண்டிய நேரம், பயணிகள் சத்தம் அதிகமாக கேட்டால் விடிந்து விட்டது என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன்", என்றார் வீ. 2017 ஆம் ஆண்டில், கிறிஸ்துமஸுக்கு முன்பு, விமான நிலைய அதிகாரிகள் அவரை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். அவர் மறுக்கவே, போலீசார் அவரை விமான நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், சில நாட்களில் அவர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டார். “விமான நிலையத்தில்தான் எனக்கு குறைந்தபட்ச சுதந்திரம் இருப்பதாக நம்புகிறேன்” என்று அவர் உருக்கமாக கூறியதால், அதன்பின் அதிகாரிகள் அவரை அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியேறச் சொல்லவில்லையாம்.