ஜப்பான் இளவரசி மகோ தனது காதலர் கொமுரோவை இன்று திருமணம் செய்துக் கொண்டார். ஒரு சாமானியரைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அரசுக் குடும்ப பட்டத்தை இழந்ததோடு தனக்கு சீதனமாக அளிக்கப்படவிருந்த பல கோடி ரூபாயையும் வேண்டாம் என சொல்லிவிட்டார் இளவரசி மகோ.  இதற்கான ஆவணத்தை ஜப்பான் அரச குடும்ப அரண்மனை வெளியிட்டுள்ளது.


ஜப்பானின் பட்டத்து இளவரசரின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான மகோ அந்நாட்டை சேர்ந்த சாமானியரான கொமுரோவைப் பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது. அப்படி செய்தால் அதற்குபின் அவர்கள் அவர்கள் அரசுக் குடும்ப பட்டம் பறிபோய்விடும். இந்நிலையில் தடையை மீறி இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொள்ள எண்ணி அதற்கான ஏற்பாடுகளை செய்தபோது, கொமுரோவின் தாயார் தன்னிடம் 4 மில்லியன் யென் (ஜப்பானிய பணம்) கடன் வாங்கி திரும்ப செலுத்தவில்லை, அதில் கொமுரோவின் படிப்பு செலவுகளும் அடங்கும் என்று அவரது முன்னாள் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இளவரசியின் காதலர் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறப்பட்டதால் அது ஜப்பானில் மிகப்பெரிய பேசுபொருளானது. அந்த பரபரப்பான விவாதங்களுக்கு மத்தியில் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொமூரோ தனது சட்டப் படிப்பிற்காக அமெரிக்காவுக்குச் சென்றார். இது எதிர்மறை கவனத்தை (Negativity) குறைப்பதற்கான முயற்சியாகத்தான் பரவலாக பேசப்பட்டது.




இது குறித்து கடந்த ஆண்டு பேசிய மகோவின் தந்தையும், பட்டத்து இளவரசருமான  அகிஷினோ தனது மகளின் திருமணத்தை ஆதரிப்பதாக கூறினார். ஆனால் அவர் பொதுமக்களின் "புரிதலை" வெல்ல வேண்டும் என்றும்  கூறினார். இதையடுத்து வழக்கமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதன் மூலமும் தங்களை சுற்றியுள்ள பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார் இளவரசி மகோ. பொதுவாக ஜப்பானில் பல்வேறு சடங்குகளுடன் அரசக் குடும்ப திருமண நிகழ்வுகள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஜோடி பாரம்பரிய சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதேபோல அரச குடும்ப பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும்போது குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரிய தொகையான   4 மில்லியன் யென் (12மில்லியன் அமெரிக்க டாலரையும்) வேண்டாம் என சொல்லியுள்ளார் இளவரசி. இந்த பணத்தை வேண்டாம் என சொல்கிற முதல் இளவரசி மகோதான். இதற்குமுன் அந்த குடும்பத்தில் யாரும் அவ்வாறு சொல்லியதில்லை. 


மகோவுக்கு 14 வயதான ஹிசாஹிடோ எனும் தம்பி உள்ளார். அவர்தான் குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு. அடுத்த அரியணை பொறுப்புகள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களுக்கு மட்டுமே செல்லும். இந்நிலையில் மகோ இன்று ஒரு சாமானியரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு வாரிசுகள் பிறந்தால் அவர்களும் அரசக் குடும்பத்தின் வாரிசுகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச கும்பத்தின் பெயரையும் தனது பெயருக்குப் பின்னால் மகோ பயன்படுத்த மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. 




முன்னதாக இன்று அதிகாலை அரண்மனையிலிருந்து மகோ வெளியேறினார். அப்போது வெளிர் நீல நிறத்தில் மிகவும் எளிமையாக ஆடை அணிந்திருந்தார்.