கடந்த மூன்று நாட்களில் காட்டை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரு பழங்குடி இணைத்தவர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில்  15 பேர் கொல்லப்பட்டு பல பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியதால் அதிகாரிகள் அங்கு சென்று கலவரத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ளது குர்ராம் மாவட்டம். இங்கு வாழும் பழங்குடி இனத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே பல காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் குர்ராம் மாவட்டத்திலுள்ள தெரி மேகல் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு வனப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் இந்த இருபிரிவினருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. அதன்பின்னர் இருதரப்பும் பேசி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி இரு பிரிவை சேர்ந்தவர்களும் சர்ச்சைக் குரிய அந்த வனப்பகுதியில் விறகு பொறுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு பொறுப்பாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.



இந்தநிலையில் இந்த உத்தரவை மீறி கடந்த சனிக்கிழமை மதியம் பழங்குடியினத்தை சேர்ந்த பெவார் இனத்தை சேர்ந்தவர்களில் சிலர் வனப்பகுதிக்குள் சென்று விறகு பொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கய்டு இனத்தவர்கள் தரப்பு விறகு பொறுக்கிகொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டது. இதை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பும் தங்களின் எதிர் தரப்பினரின் கிரமத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும், வீடுகளை அடித்து நொறுக் கியும் வன்முறையில் ஈடுப்பட்டனர். இந்த மோதலில் 15 பேர் கொல்லப்படடனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதில் 4 பேர் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதாகவும், ஞாயிறு மற்றும் நேற்று 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறையை தொடர்ந்து குர்ராம் மாவட்டத்தில் போலீஸ் மற்றும் ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொய் செய்திகள் பரவாமல் இருப்பதற்கு குர்ராம் மாவட்டத்தில் செல்போன் நெட்ஒர்க்குகள் துண்டிக்கப்பட்டுள்ளன.



செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் "தடை செய்யப்பட்ட இடத்தில் விறகுகளை பொறுக்கியதற்காக துவங்கிய இந்த சண்டையில் கடந்த சனிக்கிழமை மட்டும் 4 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமை 6 பேர் கொள்ளப்பட்டிருக்கிறார்கள், மற்றும் திங்கட்கிழமை 5 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள், என்று பெவார் இனத்தினரே தகவல் கொடுத்துருக்கின்றனர். தடை செய்யப்பட்ட காட்டில் ஒரு மரக்கிளையில் இருந்து துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் தாக்கியுள்ளார், மேலும் அவர்கள் பயங்கரமான ஆயுதங்கள் வைத்துள்ளனர். காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இப்பகுதியை சுற்றிவளைத்ததில் இருந்து நிலைமை கட்டுக்குள் உள்ளது." என்று கூறினார்.