ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.


யார் இந்த ஒமர் அல் பஷீர்:


சூடானின் நீண்ட கால அதிபராக இருந்தவர் ஒமர் அல் பஷீர். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார். அவரது ஆட்சி உள்நாட்டு கிளர்ச்சிகளால் நிரம்பியது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக கடந்த  2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.  


போர் குற்றங்களை செய்ததாகவும் மனிதநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒமர் அல் பஷீர் மீது குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியபோதிலும் 2010, 2015 தேர்தல்களில் ஒமர் சூடானில் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.


வெடித்த கலவரம்:


ராணுவ ஆட்சியில் வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது. சூடான் நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்ற குழு ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது. ஒருபுறம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இன்னொரு புறம் மக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். 


தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலை, அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தலைநகர் கார்டூமுக்கு அடுத்து உள்ள ஓம்தூர்மன் நகரில் குடியிருப்பு பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 17 உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்ற Threads செயலி... என்னென்ன சிறப்பம்சங்கள்?