பத்து நாட்களில் 65 குழந்தைகள் உட்பட 232 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஹமாஸ்களுக்கிடையிலான போர் எகிப்து அரசின் தலையீட்டால் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.இந்தப் போரில் இஸ்ரேலைச் சேர்ந்த 12 பேர் இதுவரை இறந்துள்ளனர். ஜெருசலத்தைத் தங்கள் பகுதியாக இஸ்ரேல் உரிமை கொண்டாடி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இஸ்ரேல் பாலஸ்தீனிய எல்லையான காசாவில் கடந்த 10 மே 2021 தொடங்கி போர் மூண்டது.





ஹமாஸ் இஸ்ரேலிய எல்லையில் ராக்கெட்களை ஏவியது. பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனை ராக்கெட் குண்டுகள் கொண்டு தாக்கியது.இதனால் ரம்ஜான் மாத நோன்பு கூடத் துறக்காமல் குண்டுச் சத்தங்களுக்கும் மரண ஓலங்களுக்கு நடுவே மக்கள் உயிரைக் கையில் பற்றிக்கொண்டு நடுக்கத்துடன் நாட்களைக் கடத்தி வந்தனர்.இந்த நிலையில் தற்போது எகிப்தின் தலையீட்டால் அந்தப் பகுதி மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியிருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர எகிப்து இரண்டு பேச்சுவார்த்தைக் குழுக்களையும் இந்தப் பகுதிக்கு அனுப்ப உள்ளது.




பேரழிவைச் சந்தித்துள்ள காசாவுக்கு மனிதநேய அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் செய்ய  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வந்துள்ளார். பாலஸ்தீனிய அதிபர் மஹ்முத் அப்பாஸ் மேற்பார்வையில் இந்த உதவிகள் நடைபெறும். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலரும் இதுதொடர்பாக மத்திய கிழக்குப் பகுதிக்கு பயணம் செய்ய இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சற்றே தாமதமாக போருக்குப் பிறகு இன்று தனது ரம்ஜான் நோன்பு துறப்பு நிகழ்வான ஈத்-உல்-ஃபித்தர் விழாவைப் பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர். பாலஸ்தீனிய இறப்பு எண்ணிக்கையைத் தனது வானொலிகளில் தொடர்ந்து ஒலிபரப்பி வந்த இஸ்ரேல் தற்போது மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது. இருந்தும் நிலைமை மீண்டும் மோசமாகலாம் அதற்குள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் அந்த நாட்டு மக்கள் கருத்து கூறிவருகிறார்கள்.




இஸ்ரேலின் பாலஸ்தீன் மீதான குண்டுமழைப் புகைப்படம் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. போர்க்காலத்தில் அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் கொரோனா பேரிடர் அச்சத்தையும் கடந்து பல நாடுகளை நடுக்கமுறச் செய்தன. பாலஸ்தீனிய ஹமாஸ்கள் இஸ்ரேலால தடைசெய்யப்பட்ட வன்முறைக்குழு.பாலஸ்தீனியத்தின் பாதுகாவலர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்ட ஹமாஸ்கள் இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் பாலஸ்தீனிய ஜெருசலேம் எல்லைகளில் வசிக்கின்றனர். ஹமாஸ் தாங்கள் தொடங்கிய இந்த ராக்கெட் போரை ‘ஜெருசலேத்தின் வாள் (Sword of Jerusalem) என அறிவித்தனர்.  பாலஸ்தீனிய அதிபர் அப்பாஸ் எகிப்தின் தலையீட்டிலான தற்போதைய இந்தப் பேச்சு வார்த்தையை வரவேற்றாலும் அதுகுறித்து மேலதிகக் கருத்துகளை அவர் பகிரவில்லை. இரு பகுதிகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ், ‘இருநாட்டுத் தலைவர்களுக்கும் நிலைமையை மீட்டெடுப்பதைக் கடந்து இந்தப் பிரச்னையில் வேரை அறிந்து அதற்குத் தீர்வுகாண வேண்டிய கடமை இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Also Read: ‛கருப்புப் பூஞ்சையை கொரோனாவுடன் குழப்பாதீங்க’ விளக்குகிறார் டில்லி இஎன்டி நிபுணர்!