உலகின் மிகவும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருப்பது இஸ்ரேல். இவர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு திடீரென தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லையின் வேலியை தகர்த்து உள்ளே நுழைந்த ஹமாஸ் குழுவினர் காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறினர்.


இஸ்ரேல் நிதியமைச்சர் சுட்டுக்கொலை:


மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பு வீரர்கள் உள்பட நூற்றுக்கணக்கான பேரை சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், போர் தொடுக்கப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல் ஹமாஸ் குழு மீது பதில் தாக்குதல் நடத்தியது. வான் வழி மற்றும் தரைவழி என தொடர் தாக்குதலை ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் அறிவித்தது.


இந்த நிலையில், இஸ்ரேல் நிதியமைச்சர் ஜாவத் அபு ஷமால்லாவை விமான நிலைய தாக்குதலில் சுட்டுக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 900 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களது எக்ஸ் பக்கத்தில் டெல் அவிவ், பெர் ஷேவாவில் சைரன் ஒலிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.


உலக நாடுகள் கவலை:


இந்த தாக்குதலினால் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் இருந்து 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்து 741 மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ஹமாஸின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த போர் காரணமாக காசா நகரில் இருந்த 20 ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் காசாவில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவிற்கு வெளியே சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஹமாஸ் படை தாக்குதல் நடத்தி வரும் அதேசூழலில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ராணுவ வீரர்கள் இந்த போரில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.