போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக விரும்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

போரை முடிவுக்கு கொண்டு வர முடிவு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகநாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ட்ரம்ப் அதுதொடர்பான நடவடிக்களை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். எனினும் தங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு பழி தீர்ப்போம் என ஈரான் உறுதியாக இருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் அனைத்து நாடுகளும் குழம்பியுள்ளது.  

இப்படியான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரான் தீவிரமாக விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அந்நாட்டின் தலைவர்கள் காலம் கடப்பதற்குள் தீவிரமாக செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், ராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள ஈரான் மீண்டு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. அதனால் அந்த நாடு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

அதில், “ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், விசித்திரமானவர்கள். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு நம்மிடம் கெஞ்சுகிறார்கள் இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டு வருவதற்கான வாய்ப்பு துளியும் இல்லாத நிலையில், அவர்கள் அவ்வாறு செய்வதுதான் சரி. ஆனாலும், அவர்கள் பகிரங்கமாக,  எங்கள் முன்மொழிவை வெறும் பரிசீலனையில் மட்டுமே செய்வதாகக் கூறுகிறார்கள். தவறு!!! காலம் கடந்துபோவதற்குள், அவர்கள் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால், ஒருமுறை அது நடந்துவிட்டால், பின்வாங்குவதற்கு வழியே இல்லை, மேலும் அது நல்லவிதமாக இருக்காது’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

முன்னதாக குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், ஒரு படி மேலே சென்று இஸ்லாமியக் குடியரசின் அடுத்த உச்சத் தலைவராகத் தான் வர வேண்டும் என்ற யோசனையை ஈரான்  முன்வைத்ததாகவும், தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார். ஈரானின் பல உயர்மட்டத் தலைவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிலவும்   வெற்றிடத்திற்கு நடுவில் ட்ரம்ப் தெரிவித்த இந்த கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.