இந்தோனேஷியாவில் துபானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கே சுரபயா நகருக்கு அருகே நடுக்கடலில் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3:25 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் 594 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. ஆனால், தற்போதைக்கு சுனாமிக்கு வாய்ப்பில்லை என இந்தோனேஷியா புவியியல் மையம் தெரிவித்துள்ளது. சுரபயா, துபான், டென்பசார், செமராங் ஆகிய பகுதிகளில் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டது.


இதுகுறித்து இந்தோனேசியா பேரிடர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் முஹாரி கூறுகையில், "நிலநடுக்கம் மிக ஆழமாக இருப்பதால் சேதம் ஏதும் இதுவரை இல்லை. சேதம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நாங்கள் இன்னும் கண்காணித்து வருகிறோம்" என்றார்.


சமீபத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.


இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது . பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இந்தியா உட்பட பல நாடுகளும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றனர்.


உறைந்து கிடக்கும் தட்பவெப்பநிலைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



முதல் இரண்டு நாள்களில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகள் நிலைகுலைந்துள்ளது. குறிப்பாக, ரிக்டர் அளவில் 7.8, 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.



மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். 


கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது. 


தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு வாழ்த்துகள்...ஏபிபி நாடு குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து..!