2021ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை போலந்து நாட்டை சேர்ந்த கரோலின் பைலாங்ஸ்கா என்பவர் வென்றார். இவர் 2019ம் ஆண்டில் போலந்து அழகியாக தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட்டோ ரிகாவின் சான் ஜுவான் எனும் இடத்தில் உள்ள கோகோ கோலா மியூசிக் ஹாலில் இந்த அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நடைபெற விருந்த உலக அழகிப் போட்டி 2021 கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உலக அழகிப் போட்டி போர்ட்டோ ரிகாவில் கோலாகலமாக நடைபெற்றது. பல நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்று இருந்தனர். இந்த போட்டியில், உலக அழகிப் போட்டி 2021, பட்டத்தை போலந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கரோலினா பைலாவ்ஸ்கா என்பவர் தட்டிச் சென்றார்.






அமெரிக்கா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, வட அயர்லாந்து மற்றும் கோட்டே டி ஐவரி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி மகுடம் சூடியுள்ளார். அமெரிக்கா சார்பில் பங்கேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அழகி ஸ்ரீசைனி என்பவர் தான் முதல் ரன்னர் அப் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நூலிழையில் மகுடத்தை மிஸ் செய்துள்ளார். மாடல் அழகி ஸ்ரீசைனிக்கு இந்திய ரசிகர்களும், அமெரிக்க ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியா சார்பாக உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற மானசா வாரணாசி இந்த போட்டியில் 13வது இடத்தை பெற்றார். முதல் 6 இடங்களுக்குள் கூட வரமுடியாமல் அவர் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. 






புதிய உலக அழகியாக தேர்வாகி உள்ள போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவிற்கு சர்வதேச ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். உலக அழகிப் போட்டி 2022 இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற பிரபஞ்ச அழகி 2021 போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியாக ஹானாஸ் சந்த் கவுர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.