முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


உளவு பார்த்தார்களா முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள்?


இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள், தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இந்த தனியார் நிறுவனம்தான், கத்தார் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளது.


இப்படிப்பட்ட சூழலில், தனியார் நிறுவனத்துக்காக பணியாற்ற வந்த இவர்களை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அப்போது இருந்து இப்போது வரை இவர்கள் தனிமை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.  


மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள், ஒரு காலத்தில், இந்திய கடற்படையின் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் வழிகாட்டுதலில், முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு:


சமீபத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தார். 


இந்த நிலையில், கத்தார் நீதிமன்றத்தில் மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்திய அரசு சார்பில் ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது.


தீர்ப்பின் விவரங்கள் ரகசியமானது. வழக்கறிஞர் குழுவுடன் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் (எட்டு கடற்படை அதிகாரிகளின்) குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேம், வெளியுறவு அமைச்சர் (எஸ் ஜெய்சங்கர்) அவர்களது குடும்பத்தினரை டெல்லியில் சந்தித்தார். சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் தூதரக ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.


முன்னாள் கடற்படை வீரர்கள், அதி முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் பணியாற்றி வந்ததாகவும், அப்போது, பல முக்கிய தகவல்களை அவர்கள் கசியவிட்டதாகவும் செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.