குர்பத்வந்த் சிங் பன்னூன் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பியது முற்றிலும் தேவையற்ற ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பற்றி எரியும் பன்னூன் விவகாரம்:


சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய இந்தியா முயற்சித்ததாக கடந்தாண்டு வெளியான செய்தி உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 


இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தன்னை கொல்ல இந்திய அரசு சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னூன் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், 21 நாள்களில் பதில் அளிக்க இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ரா ஏஜென்ட் விக்ரம் யாதவ் மற்றும் இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.


இந்திய, அமெரிக்க உறவில் விரிசலா? 


இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த பிரச்னைகள் முதலில் எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, ​​நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இந்த விஷயத்தில் ஒரு உயர்மட்டக் குழு விசாரணை செய்து வருகிறது.


முற்றிலும் தேவையற்ற ஒன்று. எங்கள் நிலைபாட்டை இது மாற்றாது. இந்த வழக்கை தொடர்ந்த நபரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்னூனின் வரலாறு நன்கு அறியப்பட்டதாகும். அவர் ஒரு சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்தவர்.


சீக்கியர்களுக்கான நீதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் பன்னூன். இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சை பேசி வருகிறார். மிரட்டல்களை வெளியிடுகிறார். 2020ல் அவரை தீவிரவாதியாக இந்தியா அரசு அறிவித்தது" என்றார்.


இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் புகழ்பெற்ற பைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த சதி திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக சதி திட்டத்தை தீட்டியவர்களே அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையா அல்லது அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) அவர்களின் திட்டத்தை முறியடித்தார்களா என்பது குறித்து தெரியவில்லை என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.