இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில் இன்று திருகோணமலை குச்சவெளி கடல் பரப்பில் வைத்து 45 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இவர்கள் கடல் வழி மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.



 

 இவர்களில் ஆண்கள் 11 பேரும், பெண்கள் 9 பேரும் ,மேலும் 20 வயதுக்கு  குறைந்த 25 பேரும் இந்த குழுவில் அடங்குவதாக இலங்கை போலீசார் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடையும் நிலையில் இலங்கையை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது ,அதுவும் தமது உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல் வழியாக ,படகுகளில் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

 

அதேபோல் யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற  நான்கு பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள்.ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் செலுத்தி படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள்.கடந்த இரு வாரங்களில் நூற்றுக்கும் அதிகமானோரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்திருக்கிறார்கள்.இவர்களில் அநேகமானோர் ஆஸ்திரேலியாவை நோக்கியே ஆபத்தான பயணத்தை  பயத்தை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

 

 இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.அதேபோல் படகுகள் மூலம் கடந்த மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றவர்களை இரண்டு தடவை அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.கடந்த மாதத்தில் மட்டும் உரிய அனுமதியின்றி படகுமூலம் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயன்ற  500க்கும்  மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தார்கள்.

 

அதேபோல் கடந்த மாதத்தில் மட்டும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகு மூலம் வந்து தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.இவர்களும் ஆபத்தான முறையில் படகுகள் மூலமாக தனுஷ்கோடி வரை வந்து பிழைப்பு கேட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர் .இந்நிலையில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக செல்லும்  மக்கள் பயணிக்கும் படகுகளை கண்டுபிடிக்க இலங்கை அரசும் ஆஸ்திரேலியா அரசும் இணைந்து செயல் திட்டங்களை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

தனது நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தீர்வு வழங்காவிட்டால் ,அவர்களின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால், இந்த சட்ட விரோத பயணம் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் போகிறது.சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்தும் இலங்கை அரசாங்கம்,  அவர்களுக்கு தேவையானவற்றை செய்கிறதாக என கேள்வி எழுப்பியுள்ளனர்,

 ஆகவே , மக்கள் இருக்கும் சொத்துக்களை விற்று  ,இலங்கை அரசிடம்‌ பணத்தை கொடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்றால் கடவுச்சீட்டையும் ,வீசாவையும் வழங்கி அனுப்பி வைக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது திருட்டுத்தனமான கொள்ளையாகும்.