இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.அடிப்படை தேவைகளுக்கே வசதி இல்லாமல் ,அன்றாட தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள வழியில்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஒரு நேர சாப்பாட்டுக்கே இலங்கை மக்கள் அல்லல் படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.தற்போது , தங்கள் குடும்பங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இலங்கையை விட்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது.குறிப்பாக இலங்கையில் பாஸ்போர்ட்  பெற்றுக்கொண்டு  விமான மூலமாக வெளிநாடுகளுக்கு ஏராளமான மக்கள் நாள்தோறும் சென்ற வண்ணம் உள்ளனர்.நாள்தோறும் உள்நாட்டு மக்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதால், விமான நிலையம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.குறிப்பாக இதில் குடும்பஸ்தர்கள், இளைஞர் ,யுவதிகள் அதிக அளவில் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த வருடங்களில் தொழிலுக்காக மட்டுமே  குறைந்த அளவு மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலையில் ,தற்போது அது தலைகீழாக மாறி தினசரி நூற்றுக்கணக்கானோர் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.விமானநிலையத்தில் மக்கள் குவிந்துள்ளதால் விமான நிலையம் தற்போது பரபரப்பான சூழ்நிலையில் இருக்கிறது.விமான நிலையத்தில் ,எங்கோ கோவில் திருவிழாவில் மக்கள் குவிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

 

 இந்நிலையில் தற்போது கையில் என்ன மீதம் இருக்கிறதோ அவற்றை விற்றுவிட்டு நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.சட்டவிரோதமாக சிலர் படகுகளில் நாட்டை விட்டு ,கடல் வழி மூலம் தமது உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள்.அதேபோல்  கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டும் வேறு நாடுகளில் பணிபுரிவதற்காகவும் வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் நோக்கிலும் இலங்கையின் விமான நிலையம் ஊடாக வெளியேறி வருகிறார்கள் .ஏற்கனவே யுத்தம் நடைபெற்ற போது ஏராளமான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள் .

 

சுமார் 13 லட்சம் தமிழ் மக்கள் தற்போது வெளிநாடுகளில் வசிப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் தற்போது மீதமுள்ள  தமிழ், சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறினால் எதிர்காலத்தில் இலங்கையின் நிலை என்னவாகும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

 

இதில் அரபு நாடுகளுக்கு அதாவது மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவான மக்கள் செல்கிறார்கள் .அதை விடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ஓரளவு பண வசதி படைத்தவர்கள் செல்வதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.மக்களை எல்லாம் நாட்டை விட்டு விரட்டி விட்டு ஆட்சியாளர்கள் யாரை வைத்து ஆட்சி நடத்தப் போகிறார்கள்? நம்பி வாக்களித்த மக்களுக்கு அந்நாட்டு அரசு செய்த பெரும் உதவி இதுவாகத்தான் இருக்கும்.நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க முடியாத ,நாட்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியாமல் வெளிநாடுகளுக்கு துரத்திவிடும் முதல் அரசு இலங்கையில் இதுவாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.

 

சில வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதம் என்ற தோரணையில் ஒரு இனத்தையே நாட்டை விட்டு துரத்தி விட்டார்கள்.தற்போது தமது பெரும்பான்மை சிங்களம் பேசும் மக்கள் வாழும்  பௌத்த நாடு எனக் கூறிக்கொண்டு , இன பாகுபாடுகளை கட்டவிழ்த்து விட்ட ராஜபக்ஷவினர் ,தற்போது அந்த மக்களையே நாட்டை விட்டு துரத்தி இருக்கிறார்கள்.இலங்கை அரசு ஆட்சி நடத்த பணம் இல்லை என  கூறிக்கொண்டு, மக்களிடம் உள்ள இறுதி கையிருப்பு பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.அதாவது வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கடவுச்சீட்டு தேவை, விசா தேவை ,அதுபோல் ஏனைய பொருட்கள் தேவையாக இருக்கிறது.

 

மக்கள் தம்மிடம் இருக்கும் நகைகளை ,பொருட்களை விற்று இலங்கை அரசின் மூலமாக கடவுச்சீட்டு பெற்று பெற்று  நாட்டை விட்டு செல்கிறார்கள்.நாள்தோறும் வெளியேறும் இந்த நூற்றுக்கணக்கான மக்களின் மூலம் ,இலங்கை அரசு மீண்டும் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

 

சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் மிகவும் குறைந்த நிலையில் ,நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.தற்போது உலக நாடுகள் நமது நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாமென் அறிவுறுத்தி வருகிறது .அதிலும் குறிப்பாக லண்டன் தமது நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்து இருக்கிறது.இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நிலையில், சுற்றுலா செல்லும் நோக்கோடு, பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாகவே செய்திகள் வெளியாக இருக்கின்றன.

 

இந்நிலையில் ராஜாபக்சவினர் ஆட்சியில் இருக்கும் வரை குறிப்பிட்ட முக்கிய அயல்நாடுகளும் ,உலக நாடுகளும் இலங்கைக்கு உதவுவதாக தெரியவில்லை என அந்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.ஆகவே மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் ஒரு அரசு நாடாளுமன்றத்தை நடத்தி வருகிறது .அதிலும் இன்று இலங்கையின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை, அதேபோல் நெட்வொர்க் கவரேஜ் இல்லை, டாப் பாப் செய்ய பணம் இல்லை.தொலைபேசிகள் ரீசார்ஜ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன, இவ்வாறு பல பகுதிகளிலும் மக்களுக்கு அவசர வசதிகள் கூட இல்லாத நிலைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

 

இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறு மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இலங்கையில் இந்நிலைமை நீடித்தால் இலங்கை முழுவதும் வெறிச்சோடும் நிலைமைக்கு ஆளாகுமோ என ஒரு ஐயம் ஏற்பட்டு இருக்கிறது.குறிப்பாக சட்டவிரோதமாக கடல் மூலமாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள், இன்றும் நாட்டை விட்டு வெளியேற முயன்ற என்ற நான்கு பேரை இலங்கை கடற் படையினர் கைது செய்திருக்கிறார்கள்.போராட்டங்கள் ஒரு பக்கம் ,நாட்டை விட்டு வெளியேறுவோர் ஒரு பக்கம் என நாளுக்கு நாள் இலங்கையின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிலைகுலைந்து வருவதை காண முடிகிறது.