அமெரிக்க அதிகர் ஜோ பைடனின் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூதாதையர்கள் மூன்று மனிதர்களை அடிமைகளாக வைத்திருந்ததாக, பரம்பரைகள் குறித்து ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்டர் பேனர்மேன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்டர் பேனர்மேன் "The Bidens: Inside the First Family's Fifty-Year Rise to Power" என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வம்சம் குறித்து ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இதில் 5 தலைமுறைகளுக்கு முன்பு, பைடனின் கொள்ளு தாத்தா ஜெஸ்ஸி ராபினெட் அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியின் அலிகானி கௌண்டியில் 2 அடிமைகளை வைத்திருந்ததாக 1800ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 


1850ஆம் ஆண்டு வெளிவந்துள்ள சென்சஸ் பதிவேட்டின்படி, பைடனுக்கு 3 தலைமுறைகளுக்கு முந்தைய தாத்தா தாமஸ் ராண்டில் அமெரிக்காவின் பால்டிமோர் கௌண்டியில் 14 வயது சிறுவனை அடிமையாக வைத்திருந்ததாகவும், 1860ஆம் ஆண்டு சென்சஸ் பதிவேட்டில், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய பின்பும், அடிமை அதே வீட்டில் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 



ஜோ பைடன்


 


எனினும், அமெரிக்காவின் காலனிய காலத்தோடு ஒப்பிடுகையில், ஜோ பைடனின் மூதாதையர் வெகு சிலரே இருந்துள்ளனர் எனவும், அதனால் குறைந்த அளவிலான அடிமைகளே அவர்களிடம் இருந்துள்ளனர் எனவும் அலெக்ஸாண்டர் பேனர்மேன் தெரிவித்துள்ளார். 


அடிமைகளாக இருந்தவர்களின் பரம்பரைகளின் வந்துள்ள கறுப்பின மக்களின் வளர்ச்சி என்பது அமெரிக்க அரசியலின் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் சூழலில், அரசியல்வாதிகளுக்கும், அடிமைத்தனத்திற்கும் இடையிலான உறவுகள் வாக்காளர்களாலும், அமெரிக்க ஊடகங்களாலும் மிகப்பெரிய விவகாரமாக பார்க்கப்படுகின்றன. 


முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, செனேட் சிறுபான்மையினர் தலைவர் மிட் மெக்கானெல், முன்னாள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான பீட்டோ ஓ ரூர்கே ஆகிய பல தலைவர்களின் மூதாதையர்களும் அடிமைகளை வைத்திருந்தவர்கள். இவர்களுள் மிட் மெக்கானெலின் மூதாதையர்கள் ஜேம்ஸ் மெக்கானெல், ரிச்சார்ட் டாலி ஆகியோர் 1800களில் அலபாமா பகுதியில் 14 அடிமைகளை வைத்திருந்ததாக சென்சஸ் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 



பராக் ஒபாமா


 


கடந்த 2019ஆம் ஆண்டு, நேர்காணல் ஒன்றில் மெக்கானெல், `நானும் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரே நிலைமையில் இருக்கிறோம். நாங்கள் இருவருமே அடிமைகளை வைத்திருந்தோரின் வம்சத்தில் வந்தவர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 


ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர் என்ற போதும், அவரது தாய் அமஎரிக்காவைச் சேர்ந்தவர். 2007ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிட்ட போது, வில்லியம் ரெட்வியெஸ்னர் என்ற ஆய்வாளர் ஒபாமாவின் தாய்வழி மூதாதையர் குடும்பத்தில் அடிமைகள் இருந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.