பாலஸ்தீனத்தின் காசா ஸ்ட்ரிப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலியாகினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் அடங்குவர். இந்த சம்பவத்தால் கொண்டாட்ட வீடு துக்க வீடானது. இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்துள்ளது. அண்மைக்காலங்களில் காசாவில் நடந்து மிகவும் மோசமான துயரமாக இது கருதப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதலால் இந்தப் பகுதியில் அவ்வப்போது துயரச் சம்பவங்கள் நடைபெறவுள்ளது. அதைத் தாண்டி நடந்த துக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது.


நடந்தது என்ன?
அந்தக் கட்டிடம் மூன்று அடுக்கு மாடி கொண்டது. ஜபாலியா அகதிகள் முகாமில் இருக்கிறது. அதில் ஒரு வீட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் தேக்கிவைக்கப்பட்டிருந்த கேஸோலின் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த குடியிருப்பின் 3வது மாடியில் அபு ராயா குடும்பம் வசித்து வந்தது. முகமது அபு ராயா வீட்டில் அன்று பெரும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டில் ஒரு குழந்தையின் பிறந்தநாள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நீண்ட நாட்கள் கழித்து எகிப்திலிருந்து வருகை தந்திருந்தனர்.


இந்த இரண்டு நிகழ்வையும் சேர்த்து கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் எதிர்பாராமல் அந்த தீ விபத்து நடந்தது. விபத்தில் சிக்கி மொத்தம் 21 பேர் பலியாகினர். இதில் 17 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசிய ஆஸ்பத்திரியில் உடல்கள் வைக்கப்பட்டன. அங்கிருந்து அபு ராயா அழுகையும் புலம்பலுமாக நடந்தவற்றை கூறினார்.


அபுராயாவின் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் இறந்துள்ளனர். இவரது 5 மகன்கள், 2 மருமகள்கள், 8 பேரப் பிள்ளைகளும் இதில் அடங்குவர். உடல்களின் அடையாளத்தை உடனடியாக கணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் இன்று உடல்கள் எல்லாம் நல்லடக்கம் செய்ய ஒரு மசூதிக்கு அருகில் உள்ள மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 


காசா ஸ்ட்ரிப் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஹமாஸ் தீவிரவாத குழுக்களின் பிடியில் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு கேஸ், டீசல், கேஸோலின் தட்டுப்பாடு குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும். இதனால் அவ்வப்போது கேஸ் லீக் ஆகி விபத்துக்கள் நேரிடுவது தொடர் கதையாகவே இருக்கிறது.


பாலஸ்தீன் - இஸ்ரேல் இடையே நிலவும் பிரச்சினை காரணமாக காசா பகுதிகளில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மோசமான சூழலைச் சந்தித்திருக்கிறது. இதனை பல நேரங்களில் ஐக்கிய நாடுகளின் சபையும், உலக நாடுகளுக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான யூனிசெஃபின் அறிக்கையில், காசாவில் சுமார் 5 லட்சம் சிறுவர், சிறுமியர் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டிருந்தது. 


காசா அல்லது காசா நகர் என்பது காசாகரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 515,556. பாலத்தீனத்தின் பெரிய நகரம் இதுவாகும். கி.மு. 15ம் நூற்றாண்டிலிருந்து இங்கு மக்கள் வாழத் தொடங்கினர்.