கொரோனா பெருந்தொற்று உலகை மருத்துவ ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியில் தள்ளியது. கடந்த 2 ஆண்டுகளாக அதன் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ஜப்பானில் பரவி வரும் அரிய வகை தொற்று நோய் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.


உலகை அச்சுறுத்தும் மர்ம நோய்: சதை உண்ணும் பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. இதில் அச்சமூட்டும் விஷயம் என்னவென்றால் 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை இந்த பாக்டீரியா பறித்துவிடுகிறது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஜப்பானில் திரும்ப பெறப்பட்டு வருகிறது.


இப்படிப்பட்ட சூழலில், உயிரை கொல்லும் அரிய வகை நோய் பரவி வருகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கால் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (NIID) என இந்த நோயுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் 2ஆம் தேதி வரை மட்டும் இந்த நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டின் தேசிய தொற்று நோய் மையம் (NIID) தெரிவித்துள்ளது.


இது கடந்த ஆண்டை விட அதிகம். கடந்தாண்டு மொத்தமாகவே இந்த நோயால் 941 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஸ்ட்ரெப்டோகாக்கால் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் குறித்து தேசிதொற்று நோய் மையம் ஆய்வு செய்து வருகிறது.


ஜப்பானில் மக்கள் பீதி: குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொற்று தீவிரமாகி ஸ்ட்ரெப்டோகாக்கால் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோமாக உருப்பெறுகிறது. இதில் உயிரிழப்பு விகிதம் அதிகம். இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், "நோயை விரைவாக கண்டறிந்து, ஆரம்பத்திலேயே தீவிர சிகிச்சை அளித்து, அறுவை சிகிச்சை செய்வது இந்த நோயிலிருந்து காப்பாற்றி கொள்ள சிறந்த வழிகளாகும்.


குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நோய் பாதிக்கும் குழந்தைகளுக்கு தொண்டையில் வீக்கமும் புண்ணும் ஏற்படும். இந்த அறிகுறியை ‘strep throat’ என மருத்துவர்கள் இதை தவிர, காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகளும் தென்படும்.


இந்த முதற்கட்ட அறிகுறிகளை தொடர்ந்து, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். இதையடுத்து, உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும். ஹைபோடென்ஷன் (குறைந்த ரத்த அழுத்தம்), உடல் உறுப்பு செயலிழப்பு (உறுப்புகள் வேலை செய்யாதபோது ஏற்படும் பிற அறிகுறிகள்), டாக்ரிக்கார்டியா (இயல்பை விட இதயத் துடிப்பு வேகமாக காணப்படுவது), டச்சிப்னியா (சுவாச பிரச்னை) உள்ளிட்டவை ஏற்படுலாம்.


சில வகையான பாக்டீரியாக்கள் காரணமாக மூட்டு வலி மற்றும் வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.