உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். 


இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை நேற்று முழுவதுமாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதோடு, ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை பணி நீக்கம் செய்தார்.


ட்விட்டரை வாங்குவதாக அறிவித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கிவிட்டு தற்போது அதை அவர் கையகப்படுத்தியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இவ்வளவு பெரிய தொகையை அவர் எப்படி செலுத்தினார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன. 


அதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அமெரிக்க பங்கு சந்தை வங்கிகள் மற்றும் பங்குதாரர்கள் பலரின் உதவியோடு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குக்கு ஈடாக புதிய நிறுவனத்தில் தாங்கள் வழங்கிய கடனை மாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ட்விட்டரின் பங்குகள் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அது நிறுத்தப்பட்டது. இச்சூழலில், அதற்கு புதிய முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளனர்.


இளவரசர் அல்வலீத் பின் தலால் 


சவூதி இளவரசர், கிங்டம் ஹோல்டிங் கோ. நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 35 மில்லியன் ட்விட்டர் பங்குகளை மாற்றியுள்ளார். இதன் மதிப்பு, சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒரு ட்விட்டர் பங்கின் விலை 54.20 அமெரிக்க டாலர்கள் ஆகும். அது, அவரை புதிய தாய் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய முதலீட்டாளர் ஆக்கியது.


ஜாக் டோர்சி


ட்விட்டரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி 18 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை அதாவது நிறுவனத்தில் சுமார் 2.4 விழுக்காட்டினை சுமார் 978 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இதன் மூலம் ட்விட்டரைக் கட்டுப்படுத்தும் மஸ்க்கின் எக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அவர் பெற்றுள்ளார்.


கத்தார் முதலீட்டு ஆணையம்


கத்தார் அரசுக்கு சொந்தமான நிறுவனம் கத்தார் முதலீட்டு ஆணையம். இதன் துணை நிறுவனம், மஸ்கின் ஹோல்டிங் கம்பெனியின் பங்குகளுக்கு ஈடாக 375 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளது.