உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு 3 வயதில் ஒரு தம்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் தான் இணையதளங்களில் வைரலானார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஷிவான் ஸில்லிசுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இரட்டைக் குழந்தைகள் கடந்த ஆண்டு பிறந்ததாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதன் மூலம் எலான் மஸ்க்கின் குழந்தைகள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.


இந்த நிலையில், எலான் மஸ்க்கின் தந்தைக்கு கடந்த 2019ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்திருப்பதாக எலான் மஸ்க்கின் தந்தை எர்ரால் மஸ்க் தி சன் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் பொறியாளராக இருக்கும் எர்ரால் மஸ்க் தனக்கு பிறந்திருக்கும் இரண்டாவது குழந்தை திட்டமிடப்படாதது என்றும், 2019ல் பிறந்த அந்த குழந்தை ஜனா பெசுய்டென்ஹவ்ட்டுடன் வசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.




தற்போது 76 வயதாகும் எர்ரால் மஸ்க்கிற்கும் ஜன பெசுய்டென்ஹவ்ட்டிற்கும் இடையே கடந்த 2017ல்  முதல் குழந்தையான எல்லியாட் ரஷ் பிறந்த நிலையில், 2019ல் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதில் பெசுய்டென்ஹவ்ட்டிற்கும் எர்ரால் மஸ்க்கிற்கும் இடையிலான உறவுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


எர்ரால் மஸ்க் பெற்றிருக்கும் இரண்டு குழந்தைகளின் அம்மாவான ஜனா, எர்ரால் மஸ்க்கின் இரண்டாவது மனைவியான ஹெய்டி பெசுய்டென்ஹவ்ட்டிற்குப் பிறந்த மகளாவார். 1979ல் எலான் மஸ்க்கின் தாயான மாயே மஸ்க் உடனான விவாகரத்திற்குப் பிறகு தான் ஹெய்டியை திருமணம் செய்துகொண்டார் எர்ரால் மஸ்க். மாயே மஸ்க் மூலம் எலான் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் என்ற மூன்று குழந்தைகள் பிறந்தது.




எர்ரால் மஸ்க், ஹெய்டி பெசுய்டென்ஹவ்ட் உடனான 18 ஆண்டுகால திருமண உறவில் 2 குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஆனால், ஹெய்டிக்கு ஏற்கனவே திருமணமானவருடன் ஒரு குழந்தை உள்ளது. அவர் தான் ஜனா. முறைப்படி மகள் முறை வரவேண்டியவரைதான் கர்ப்பமாக்கி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் எர்ரால் மஸ்க். எர்ரால் மஸ்க் பெற்றிருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு, ஜனா முறைப்படி சகோதரியாவார். 


இந்த செய்தியைக் கேட்டு எர்ரால் மஸ்க்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த உறவை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், இந்த உறவு மிகவும் மோசமாக இருக்கிறது. ஏனென்றால் இருவரும் அவர்களுக்கு சகோதரி அல்லது பாதி சகோதரி முறை வருவார்கள்” என்று கூறியுள்ளதாக எர்ரால் மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், “மனிதன் பூமியில் பிறந்ததே இனப்பெருக்கம் செய்யதான்” என்று எர்ரால் மஸ்க் கூறியுள்ளார்.