உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.


ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த டன்சோ:


அதன் தொடர்ச்சியாக, டன்சோ நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பணியாளர்கள் எண்ணிக்கையில் 30 சதவிகித ஆட்களை குறைத்துள்ளது டன்சோ. அதாவது, கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் பணியில் இருந்து தூக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், டன்சோ நிறுவனத்திற்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது. 


வரும் 2025ஆம் ஆண்டு, டன்சோ நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தையில் விற்கப்பட உள்ள நிலையில், பணி நீக்க நடவடிக்கை டன்சோ நிறுவனத்திற்கு உதவும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். 


முன்னதாக, ஐடி நிறுவனமான அக்சன்சர் நிறுவனமும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள உள்ளதாக அறிவித்தது. கிட்டத்தட்ட 19,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளது  அக்சன்சர் நிறுவனம். இதனால், ஆண்டு வருவாயும் லாபமும் குறையும் என அந்நிறுவனம் கணித்தது.


சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது. 


அதிர்ச்சி மேல் அதிர்ச்சி:


அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம். கடந்த ஜுன் மாத விவரங்களின்படி, வாஷிங்டனை மையாமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  


அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.


தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம்  சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால், சந்தையில் தனது கிளை க்ளவுட் நிறுவனமான அசூர்-ன் வளர்ச்சியை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவினங்களை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஏற்கெனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன.