பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்தனர். 120 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வடமேற்கு பாகிஸ்தானில் அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் தாக்குதல் நடந்தபோது 500 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பின்னர் அந்த இடம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விசாரணையின் போது, மர்ம  நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை படையாக செயல்பட்டது தெரிய வந்தது.


இந்த சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 40 க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. தற்கொலை படை வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடப்பதை அதில் காணலாம். ரத்த வெள்ளத்தில் கிடப்பவர்களை தன்னார்வலர்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்ற உதவி வருகின்றனர். இதற்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


பாகிஸ்தானில் நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முடிவடைகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி, பாகிஸ்தான் நாடாளுமன்றம் (NA) கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.


இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இம்மாதிரியான சூழலில், அரசியல் கட்சி கூட்டத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் துணைப் பிரதமர் ஹெ லைஃபெங் உள்பட சீன அரசின் மூத்த பிரதிநிதிகள் குழு, இன்று மாலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு செல்லவிருந்த நிலையில், குண்டிவெடிப்பு நிகழ்ந்துள்ளது.


இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை,  ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.