ஈராக் தலைநகர் பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பகுதியான கிரீன் சோன் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அரசியலில் இருந்து விலகுவதாக இஸ்லாமிய சியா பிரிவு மதகுரு மொக்தாவில் சதர் அறிவித்ததையடுத்து, பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. அதில் சிக்கிய மதகுருவின் 15 ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.


 






ஈராக்கில் பல மாதங்களாக புதிய அரசு இன்றி அதாவது பிரதமர் மற்றும் அதிபர் இல்லாமல் அரசியல் பதற்றம் நீடித்த வந்த நிலையில், தற்போது அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக, சதரின் அறிவிப்பை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் அரசின் மாளிகைக்குள் படையெடுத்ததை தொடர்ந்து, அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.


உயர் பாதுகாப்பு பகுதியான கிரீன் சோனில் குறைந்தது ஏழு குண்டுகள் வீசப்பட்டன. இங்குதான், அரசாங்க கட்டிடங்கள் மற்றும் தூதரக செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கிரீன் சோனில் பயங்கர ஆயுதங்களின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட குண்டு மழை தாக்குதலுக்கு யார் காரணம் என உடனடியாக தெரியவில்லை.


 






சதரின் ஆதரவாளர்கள் கிரீன் சோனில் வெளியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், உள்ளே இருந்த பாதுகாப்புப் படையினர் அதற்கு பதில் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு பகுதியில் முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் சதரின் ஆதரவாளர்கள் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். சிலர் புல்லட் காயங்களாலும் மற்றவர்கள் கண்ணீர்ப்புகை சுவாசத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சதர் ஆதரவாளர்கள், அவர்களின் எதிர் ஷியா பிரிவு ஆதரவாளர்கள் (ஈரான் சார்பு ஒருங்கிணைப்பு அமைப்பு) ஆகியோருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அரசு அமைப்புகளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் சார்பு ஒருங்கிணைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சதர் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


இரவு 7:00 மணி முதல் (1600 GMT) நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது.