China - Taiwan Issue in Tamil: தைவானைச் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்துவது போன்று, சீனா போர் ஒத்திகை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தைவானை கைப்பற்றுவது போன்று, சீனா ஏன் போர் ஒத்திகை நடத்தியுள்ளது? அதற்கு தைவான் என்ன தெரிவித்துள்ளது?, அமெரிக்கா நாடு சொன்னது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
 


தைவானைச் சுற்றி வளைத்த சீனா:


தைவான், தென் சீன கடல் பகுதிக்கு மேலேயும், கிழக்கு சீன கடல் பகுதிக்கு கீழேயும் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த பகுதியை சீனா, பல ஆண்டுகளாக , தனக்குச் சொந்தமான பகுதி என்றும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்து வருகிறது. ஆனால், அங்கு ஆட்சி செய்யும் அரசு , அதை  முற்றிலும் மறுத்து, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அவ்வப்போது, போர் ஒத்திகை நடத்தி வரும் சீனா, தற்போது தரைப்படை, கடற்படை , விமானப்படை உள்ளிட்ட படைகளை வைத்து, தைவானை கைப்பற்றுவது போன்று போர் ஒத்திகை நடத்தி வருகிறது. 






 


ஏன் தற்போது?


இந்நிலையில், திடீரென முப்படைகளையும் வைத்து , தைவானை கைப்பற்றுவது போன்ற ஒத்திகை நடத்துகிறது ஏன் என பார்க்கும்போது , “ இந்த ஆண்டு தொடக்கத்தில் , தைவானின் புதிய அதிபராக பதவியேற்ற லாய், சீனாவுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பேசியதாவது “ நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும் மற்றும் நமது நாட்டை இணைக்கும் முயற்சியையும் எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்துதான், தைவானை கைப்பற்றும் வகையிலான போர் ஒத்திகையை சீனா நடத்தியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன 


நாங்களும் தயார்  - தைவான்


இந்நிலையில், சீனா போர் ஒத்திகை நடத்திய நிலையில் தைவான் தெரிவித்ததாவது  “விமான படை, ராணுவம், கடற்படை ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தைவானின் ஜனநாயக அமைப்பையும், தேசிய பாதுகாப்பையும், அரசு பாதுகாக்கும் என்றும், ராணுவம் தயார்நிலையில் இருக்கும் வீடியோவையையும் தைவான் வெளியிட்டுள்ளது. 


அமெரிக்கா சொல்வது என்ன?



 இந்நிலையில், இது குறித்து அமெரிக்கா தெரிவிக்கையில், சீனா போர் ஒத்திகையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் சீனா நடந்து கொள்ள கூடாது எனவும், இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சீன கடல் பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதை பார்க்க முடிகிறது.