பாகிஸ்தான் நாட்டில் பாஜோர் மாவட்டத்தில் அமைந்துள்ள இனாயத்கலி. இந்த பகுதியில் வசித்து வருபர் தனது மனைவியுடன் வசித்து வந்தார் குலிஸ்தான். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அலறல் சத்தத்துடன் குலிஸ்தான் மனைவி தனது கணவரை யாரோ சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று கதறிக்கொண்டே வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அக்கம் பக்த்தினர் குலிஸ்தான் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


குலிஸ்தான் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய லூசிம் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டனர். கணவரை இழந்த குலிஸ்தான் மனைவிக்கு ஆறுதல் கூறிய போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர். குலிஸ்தான் மனைவியின் பதில்கள் சற்று முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார். இதையடுத்து, குலிஸ்தானை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதை அவரது மனைவி ஒப்புக்கொண்டார்.


குலிஸ்தானை கொலை செய்ததற்காக அவரது மனைவி கூறிய காரணம் போலீசார் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், “ ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் ஷா ஷமீத். ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தைச் சேர்ந்தவர் அவர்தான் எனது முதல் கணவர். பெஷாவர் நகரத்தில் பணிபுரிந்து வந்த அவருடன் நான் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எங்களுக்கு ஒரு மகள் உள்ளது.




உயிரிழந்த குலிஸ்தான் எனது கணவர் ஷாஷமீத்தின் நெருங்கிய நண்பர். அவர் மீது எனது கணவர் ஷா ஷமீத் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். என் கணவர் அவர் உழைத்த பணம் அனைத்தையும் குலிஸ்தானிடம் கொடுத்து வைத்திருந்தார். தேவைப்படும்போது அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பார்.   


மூன்று வருடங்களுக்கு முன்பு எனது கணவர் ஷா ஷமீத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தனது சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது. பணத்தை திருப்பித் தருமாறு குலிஸ்தானிடம் கேட்டுள்ளார். ஆனால், குலிஸ்தான் தன்னிடம் பணம் இப்போது இல்லை என்று கூறியதுடன், தானே மருந்து வாங்கித் தருவதாகவும் கூறினார்.


மருந்துகளும், ஊசிகளும் வாங்கி வந்த குலிஸ்தான் எனது கணவருக்கு நதிக்கரை ஓரத்தில் ஊசியை செலுத்தியுள்ளார். இந்த ஊசியை செலுத்திக்கொண்டால் உடல்நிலை சரியாகிவிடும் என்ற குலிஸ்தான் பேச்சை ஷா ஷமீத்தும் நம்பி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மற்றொரு ஊசியை கொடுத்து வீட்டுக்கு சென்று இந்த ஊசியை செலுத்திக் கொள் என்றும் கூறியுள்ளார்.


ஆனால், குலிஸ்தான் செலுத்திய ஊசியால் எனது கணவர் ஷா ஷமீத்தின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. உடல்நலக்குறைவால் தரையில் விழுந்து கிடந்த எனது கணவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், எனது கணவரை சடலமாகதான் வீட்டிற்கு கொண்டு வந்தனர். குலிஸ்தான்தான் எனது கணவருக்கு ஊசி செலுத்தியதாக நதிக்கரையில் பார்த்த சிலர் என்னிடம் கூறினர்.




இதனால், எனது கணவரை கொன்ற குலிஸ்தானை கொலை செய்யத் திட்டமிட்டேன்.  அவரை பழிவாங்க வேண்டும் என்று சுமார் 6 மாதங்கள் முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த குலிஸ்தானை, என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன். என்னிடம் பணம் இருக்கிறது. நீங்கள் ஒரு காரை வாங்கி அதில் ஊர் சுற்றலாம். நீங்கள் தொழில் செய்யலாம். நாம் சுகமாக வாழலாம் என்று ஆசையை தூண்டினேன்.


கடந்தாண்டு ஈத் பண்டிகைக்கு முன்பு, குலித்கானை திருமணம் செய்து கொண்டேன்.  ஆறு மாதங்கள் ஒரு வீட்டிலும், சில சமயங்கள் அவரது சகோதரி வீட்டிலும் வசித்து வந்தோம். பின்னர், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து வசிக்கலாம் என்று கூறி, இனாயத் கலி பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தோம். அந்த வீட்டில் நாங்கள் தனியாக வசதிப்பதால் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கி வேண்டும் என்று குலிஸ்தானிடம் கூறினேன். குலிஸ்தானும் ரூபாய் 13 ஆயிரத்து 500ல் ஒரு துப்பாக்கி வாங்கினார். எனது கணவரின் மரணத்திற்கு பழிவாங்க அந்த கைத்துப்பாக்கியை பயன்படுத்துவது என்று முடிவு செய்தேன்.




சம்பவம் நடைபெற்ற அன்றிரவு, நள்ளிரவு ஒரு மணியளவில் மற்றொரு அறையில் இருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த குலிஸ்தானிடம் சென்றேன். கணவரின் மரணத்திற்கு பழிதீர்க்க துப்பாக்கியால் சுட்டேன். ஆனால், துப்பாக்கி வேலை செய்யவில்லை. உடனடியாக, வேறு அறைக்கு சென்று துப்பாக்கியை சரிபார்த்தேன்.


மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த குலிஸ்தானின் தலையில் துப்பாக்கியால் சுட்டேன். பின்னர், குலிஸ்தானின் உடலில் வலது பக்கத்திலும் சுட்டேன். விடியும் வரை குலிஸ்தான் சடலத்தின் அருகிலே அமர்ந்திருந்தேன். பின்னர், நானே வெளியே வந்து தன் கணவரை யாரோ சுட்டுவிட்டதாக கூறினேன்.”


இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அந்த பெண்ணை சிறையில் அடைத்தனர். தன் கணவரை கொன்றவனை கொல்வதற்காக, அவனையே திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் காத்திருந்து பழங்குடியின பெண் கொலை செய்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.