கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 15 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.


சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு 2.5 பில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கியது. மேலும் 31 போர் பீரங்கிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வரும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த போரை நிறுத்த இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்கள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் போன்றவை இரு நாட்டு தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய முன்தினம்  நிவாரண பொருட்களை பெற வரிசையில் காத்திருந்த மக்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்கு முன் நேற்றைய தினம் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அப்போது ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, இதனால் உக்ரைன் நாட்டு வான் பாதுகாப்பு படையினருக்கு அந்த அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.






இருப்பினும் இந்த ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் நாட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்றாலும் தீ விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படனர். தீயணைப்பு வீரர்களும்  மீட்பு குழுவினரும் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர் ட்ரோன் தாக்குதலால் உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது.