அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


தொடரும் துப்பாக்கிச்சூடு:


இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு மாகாணமான அலபாமாவில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது 20 பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தாடெவில்லேவில் உள்ள ஒரு கட்டிடத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததையடுத்து அந்த பகுதியை காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். 


கட்டிடத்தின் தரையில் வெள்ளை தாள்கள் போட்டு மூடப்பட்டிருந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் எத்தனை உயிரிழப்புகள் நடந்தது, எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் எதையும் உறுதி செய்யவில்லை.


ஆனால், உள்ளூர் ஊடகங்களும் சம்பவத்தை நேரில் பார்த்த சிலரும், "பலர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர். மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக" கூறினர்.


முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி:


முதற்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளது. ​​சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் பதின்ம வயதினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு நடந்தது தெரிய வந்தது. பார்ட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


சமீபத்தில்தான், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 


அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.


அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.