ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் ஆஃப்கானிஸ்தான் கொண்டு வந்தது.  இதனால் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியானது. 


இந்நிலையில் அஷ்ரஃப் கனி தப்பித்தது தொடர்பாக ஆஃப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளர் நிகிதா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, "ஆஃப்கானிஸ்தானிலிருந்து நான்கு காரில் நிரப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி ஆஃப்கானிலிருந்து அதன் அதிபர் அஷ்ரப் கனி வெளியேறியுள்ளார். அவருடைய காரில் பணத்தை நிரப்பும்போது பார்த்த சிலர் அளித்த தகவலை வைத்து இதை நான் தெரிவிக்கிறேன். மேலும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆஃப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது எனக் கூறினார். 




இதற்கிடையே பணத்துடன் தஜிகிஸ்தான் சென்ற அஷ்ரஃப் கனியின் ஹெலிகாப்டரை அங்கு தரையிரங்க அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் அவர் அடுத்து ஒமான் சென்று அங்கு இருந்து அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. 


முன்னதாக நேற்று இன்று மாலை ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளுடன் காபூலில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைந்தது. அந்த விமானத்தின் மூலம் இந்தியா வந்த பெண் ஒருவர், "உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தானை கைவிட்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தலிபான்கள் என்னுடைய நண்பர்களை விரைவில் கொலை செய்துவிடுவார்கள். அங்கு இனிமேல் பெண்களுக்கு எந்தவித உரிமையையும் இருக்காது" எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆஃப்கானிஸ்தான் பெண் ஆரிஃபா, "ஆஃப்கானிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. என்னால் நிம்மதியாக சாப்பிட்டு தூங்க முடியவில்லை. அங்கு தற்போது சுதந்திரம் இல்லை. எங்களுக்கு விரைவில் சுதந்திரம் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 


ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் அங்கு பெண்களுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அத்துடன் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டமும் அங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரிய அச்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: விமானத்தின் டயரில் அமர்ந்து தப்பிக்க துடிக்கும் மக்கள் : ஆஃப்கனின் அதிர்ச்சி வீடியோக்கள்