5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அத்துடன் அத்தியாவசி மருந்துப் பொருட்களை அனுப்பிவைத்த இந்தியாவுக்கு தலிபான்கள் நன்றி கூறியுள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த ஆகஸ்ட்டில் இருந்து அங்கு தலிபான்களின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.


தலிபான் ஆட்சியை இன்னும் எந்த ஓர் ஆரசும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு இணங்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை ஒருசில நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு செய்து வருகின்றன.


ஆப்கானிஸ்தானுக்கு கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற நாடுகள் மட்டுமே உதவிகளை அளித்து வந்தன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் உட்பட 1.6 மெட்ரிக் டன் எடை கொண்ட அவசரகால பயன்பாட்டுக்கான மருத்துவ உதவி பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலமும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மூலம் பயன்படுத்தப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.


இந்தப் பொருட்கள் அனைத்திலும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியர்களின் அன்பளிப்பு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தலிபான்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். தாலிபான்கள் மிகுந்த துயரத்தில் இருக்கும்போது இந்தியா அளித்துள்ள மனிதாபிமான உதவி என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும் என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளது.




இந்த மருந்துப் பொருட்களும் நின்றுவிடாமல் இனி வருங்காலங்களில் ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க நேட்டோ படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. தீவிரவாத ஒழிப்புக்காக ஆப்கன் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டு அங்கு ஆட்சியில் இருந்த அரசுடன் இணைந்து செயல்பட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், அமெரிக்காவில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார். அன்றுதொட்டே தலிபான்களின் கை மேலோங்கியது. இறுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.


ஆனால், தலிபான்கள் அமைத்துள்ள அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல்வேறு புள்ளிகளும் ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டவர்கள் என்பதால், ஆப்கனின் புதிய தலிபான் ஆட்சி இன்னும் பல நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.


ஆகையால் ஆப்கன் பொருளாதார தடைகள், வர்த்தக முடக்கம் என நிதிச் சுழலில் சிக்கியுள்ளது. ஆப்கன் மக்கள் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்குள்ள குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தான், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அத்துடன் அத்தியாவசி மருந்துப் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.