ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்ப காலத்திலோ அல்லது பிரசவத்தின்போதோ இறக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


பெண்களின் உடல்நலம் குறித்து  ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், கர்ப்ப காலத்தில், பிரவசத்தில் சிக்கல் ஏற்படும் போது ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளது. 2000 -2015 ஆம் ஆண்களுக்கு இடையில் பேறுகால இறப்பு குறைந்திருப்பதாகவும், 2016-2020 காலகட்டத்தில் விகிதத்தில் பெரிதாக மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 


கடந்த 20 ஆண்டுகளில் பேறுகால இறப்பு விகிதம் 34.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு லட்சம் பிரசவங்களில் 399 தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும், இது 2020-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்தில் 223 பெண்கள் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும், பிரசவ சிக்கல்கள் உள்ளிட்டவற்றால் ஒரு நாளைக்கு  800 பெண்கள் இறந்துள்ளனர்.  வெணின்சுலா அதிக இறப்புகளையும், பெலாரஸ் குறைந்த விகிதத்தையும் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் அதிகளவு பேறுகால இறப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உலக அளவில் பெண்களுக்கு பேறுகாலம் என்பது மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு நேர்மறையான, இனிமையான காலகட்டமாக இருந்தாலும், பல லட்சக்கண்கானவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும், ஆபத்தான அனுபவத்தை தந்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார். 


இந்தப் புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு பேறுகாலத்தில் தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பேறுகாலத்தில் தேவையான அனைத்து ஊட்டச்சத்து மற்றும் அவசரகால மருத்துவ உதவிகளை பெறுவதும் ஒவ்வொரு பெண்ணின் உரிமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.