ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைப் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். வெடிகுண்டு வீசிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 






ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளருடன் ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக , 65 வயதான ஜப்பான் பிரதமருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை அவர் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். வெடிகுண்டு வீசியவர் இளைஞர் என்றும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  






கடந்த மாதம், கிஷிடா புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, அவர் உக்ரைனின் தேசிய தலைநகரான கியேவில், உக்ரைன் பிரதமர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


இதற்கு முன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாராவில் பிரச்சார உரையின் போது படுகொலை செய்யப்பட்ட சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. 67 வயதான ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சார உரையின் போது பின்னால் இருந்து மர்ம நபரால் சுடப்பட்டார். அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கி பயன்படுத்த மிகுந்த கட்டுப்பாடு இருக்கும் உலகின் பாதுக்காப்பான நாடுகளில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.