இத்தாலியின் லம்பேடுசா (Lampedusa) தீவில் படகு உடைந்து ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.


துனிசியா (Tunisian) நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து 45-க்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு படகு நேற்று முன்தினம் இத்தாலியை நோக்கி வந்துள்ளது. அந்தப் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவு அருகே பயணித்து கொண்டிருந்தபோது திடீரென உடைந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 41 அகதிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.


 கடலில் விழுந்த பயணிகளை சம்பவம் அறிந்த கடலோர காவல் படையினரும், அந்த வழியாக வந்த சரக்கு கப்பலைச் சேர்ந்த வீரர்களும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்களில்  3 ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்டோர் அடங்குவர் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


 இத்தாலியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள லம்பேடுசா தீவுக்கு 2000-ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, முக்கியமாக லிபியாவிலிருந்து வந்து குடியேறுபவர்களுக்கான பகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலி நாட்டுக்கு அகதிகளாக செல்லும் முயற்சியில் இந்த ஆண்டு மட்டும் 1,800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.