மிஸ் யுனிவர்ஸ் இந்தோனியா அழகுப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 


மிஸ் யுனிவர்ஸ்: 


மிஸ் யுனிவர்ஸ் அழகுப் போட்டியில் வெற்றி பெருவது மிகவும் கடினமான ஒன்று. இதில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் மூன்று சுற்றுகளை கடக்க வேண்டும். மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு முன் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நாட்டில் போட்டிகளை நடத்தும். எடுத்துக்காட்டாக மிஸ் இந்தியா பட்டத்தை வெல்லும் போட்டியாளர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்குப் பெற முடியும். ஆனால் மிஸ் யுனிவர்ஸ் ஆக பல விதிகள் உள்ளன. இதையெல்லாம் கடந்து மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்பது சவாலான ஒன்று தான். இந்நிலையில், தான் மிஸ் யுனிவர்ஸ் இந்தோனியா அழகுப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


பரபர குற்றச்சாட்டு:


கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஜகார்த்த நகரில் உள்ள பீச்சிட்டி சர்வதேச மைதானத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஃபபியன் என்பவர் பட்டம் வென்றார். அவர் தான் இந்தோனேசியா சார்பில் மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற 6க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


அதன்படி, "உடல் பரிசோதனை என்று கூறி தங்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு பல ஆண்கள் இருந்தனர். அறையின் கதவுகள் மூடப்படாமல் இருந்தது. பின்னர், உடல் பரிசோதனை என்று கூறி, சீண்டலில் ஈடுபட்டதாகவும், மேலாடையின்றி புகைப்படம் எடுத்ததாகவும்” குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், "உடலில் ஏதேனும் தழும்புகள், பச்சை குத்தப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி தங்களின் உள்ளாடைகளை அவிழ்க்க சொல்லி புகைப்படம் எடுத்ததாக” புகார் அளித்தனர். இதுகுறித்து ஒரு போட்டியாளர் கூறுகையில், "இதுபோன்று நடத்துக் கொண்டது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது என்னை மனரீதியாக பாதித்தது. என்னால் சரியாக கூட தூங்க முடியவில்லை" என்று கூறினார்.  இந்த புகார் குறித்து ஜகார்தா காவல்துறை விசாரணை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். 


இது பற்றி முன்னாள் மிஸ் இந்தோனேசியா மரியா ஹர்ஃபான்டி கூறுகையில், "போட்டியாளர்களுக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்வது இயல்பானது. ஆனால், மேலாடையின்றி ஒருபோதும் சோதனைகள் நடத்தப்படுவதில்லை. போட்டியாளர்களின் உடல்  சரிபார்க்க, பிஎம்ஐ அல்லது உடல் எடையை அமைப்பாளர்கள் அடிக்கடி கேட்பார்கள். உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு இந்த விஷயத்தை கவனித்து வருவதாகவும், பாலியல் குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.