Just In





Iran Judges Shot Dead; ஈரானில் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு...
Iran Judges Shot Dead; ஈரானில் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக்கொன்ற நபர், தானும் தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகளை சுட்டுக்கொன்ற மர்ம நபர்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உள்ளது. அங்குள்ள நீதிபதிகளின் ஓய்வு அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கு அமர்ந்திருந்த நீதிபதிகள் இருவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், நீதிபதிகள் அலி ரஸ்சினி, முகமது மொஹிசே ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், நீதிபதிகளின் பாதுகாவலரும் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மர்ம நபர்
உச்சநீதிமன்றத்திற்குள் துணிச்சலாக புகுந்து, நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களை கொன்ற மர்ம நபர், தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதிகள் தேசிய பாதுகாப்பு, உளவு பார்த்தல், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை கையாண்டு வந்ததாகவும், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியவர்கள் என்றும் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்திற்குள்ளேயே துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.