அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் சிக்கி 18 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


எப்போதும் இல்லா அளவுக்கு அமெரிக்கா பனிப்புயலில் எதிர்கொண்டுள்ளது. மைனஸ் 40 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குளிர் வீசி வருவதால் அமெரிக்கா நிலைகுலைந்து உள்ளது. பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது.


வரலாறு காணாத பனிப்புயலில் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடும் பனி, தீவிரமான காற்று ஆகியவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. 


அமெரிக்காவின் மத்திய பகுதியையும் ஆர்டிக் பகுதியையும் கடும் குளிர் திருப்பி போட்டுள்ளது. கடும் குளிரில் சிக்கி தவித்து வரும் லட்சக்கணக்கான மக்கள், கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






கிறிஸ்துமஸ் காரணமாக 10 கோடி மக்கள் சாலையில் பயணிப்பார்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியே எதுவும் தெரியாத அளவுக்கு மூடுபனி நிலவிவருகிறது. அதேபோல, சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவின் வடக்கு பகுதியான தெற்கு டகோட்டாவில் அமைந்துள்ள I-90 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை, அது திறக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


"சாலைகளை சரி செய்வதற்கும் மீட்டெடுப்பதற்கும் மாநிலம் முழுவதிலும் பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர்" என தெற்கு டகோட்டா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.






போக்குவரத்து நெரிசல் குறித்து பென்னிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மாநிலத்தில் ரேபிட் சிட்டி அருகே சுமார் 100 வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்தனர். பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


அமெரிக்க முழுவதும் பனிப்புயலல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக வேறு ஊர்களுக்கு செல்லும் திட்டங்கள் உள்ளவர்களின் பயணம் தடைப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் கார் விபத்து, மரங்கள் சாய்ந்துள்ளது ஆகியவைகள் நிகழ்ந்துள்ளன. பபெல்லோ பகுதியில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள இருவர் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


பென்சில்வேனியாவில் நிலவும் கடும் குளிர், பனிப்பொழிவால் பல்வேறு வீடுகளுக்கு மின்சாரம் சேவை வழங்குவது கடினமாக இருப்பதாக மின்சார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்று பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த வாரங்களில் குளிர் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.