புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொட்டும் மழையிலும் சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழா (புதன்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


சதுர்த்தியை முன்னிட்டு, மூலவர் மணக்குள விநாயகருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது. இதையடுத்து மூலவர் மற்றும் உற்சவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து உற்சவர் மணக்குள விநாயகர் கோயில் உள்பிறகாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டும் மழையிலும் காலை முதலே பக்தர்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடும், பொதுமக்கள் தரிசனமும் நடைபெற்று வருகிறது.






மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7913 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் பரந்து விரிந்துள்ளது. மணலைக் குறிக்கும் ‘மணல்’ மற்றும் கடலுக்கு அருகில் உள்ள குளத்தைக் குறிக்கும் ‘குளம்’ ஆகிய இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து மணக்குள என்ற பெயர் வந்தது. மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.



இன்று இக்குளம் இல்லை. ஆனாலும் மூலவருக்கு அருகே இடது புறத்தில் ஒரு சிறிய சதுர அளவில் அன்றைய மணற்குளம் இன்றும் உண்டு. இங்கு கடல் வெகு அருகில் இருந்தபோதும் சுத்தமான நீர் இதில் சுரக்கிறது. இதில் எது போட்டாலும் நிறம் கறுப்பாக மாறிவிடும். தீராத நோய்களையும் இந்த நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை. தடங்கல் ஏற்பட்டு திருமணம் தள்ளிக்கொண்டே இருப்பவர்களுக்கு இவரை தரிசனம் செய்தால் திருமணம் வெகுவிரைவில் கூடும். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.




ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் சிறப்புகள்



  1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது .

  2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

  3. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின், இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

  4. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.

  5. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

  6. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

  7. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

  8. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.

  9. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

  10. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

  11. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

  12. திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

  13. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.