வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.


32 அடி உயரம் கொண்ட வீடூர் அணை கனமழை காரணமாக 29.700 அடி வரை நிரம்பி உள்ளது. விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என்பதால் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நிலை உள்ளது. அவ்வாறு திறந்துவிடப்படும் நீர் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி மாநில எல்லையான மணலிப்பட்டை வந்தடைந்து செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிளைப் பட்டு வழியாக ஊசுட்டேரியின் ஒரு பகுதிக்குச் செல்லும். மறுபகுதி குமராபாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு வழியாக வில்லியனூர் சென்று கடலில் கலக்கும். இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆகவே, சங்கராபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.


எந்த நேரமும் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் ஆற்றுப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க, குளிப்பாட்ட ஓட்டிச் செல்லக்கூடாது, மேலும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு 4645 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் அணையின் முழு கொள்ளவான 119 அடியில்  அணையில் 117 அடியை எட்டியது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தென்பண்ணையாற்றில் 4645 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.