விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் இரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஊராட்சி நிதியை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக சுந்தரம் மற்றும் மாலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பணிபுரியகூடிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், மத்திய அரசு வழங்ககூடிய 15வது மத்திய நிதிக்குழுவின் மானிய தொகை, ஊராட்சி பொது நிதி, மின்கட்டண நிதி ஆகியவைகளிலிருந்து ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் செய்துள்ளார். இவருக்கு உறுதுணையாக துணை வட்டாட்சியராக உள்ள மாலா இணைந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த மோசடியானது இரண்டு வருடங்களில் எடுக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டதை அடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார் அளித்தனர்.


அந்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இருவர் மீதும் விசாரணை நடத்திய போது இருவரும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் கையாடல் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் அளவிலான மொத்த பணத்தையும் எந்தெந்த ஊராட்சி நிதிகளிலிருந்து எடுக்கப்பட்டதோ அந்தந்த ஊராட்சிகளில் தொகையை கட்ட வேண்டுமென கூறப்பட்டத்தின் அடிப்படையில் 60 லட்ச ரூபாயை இதுவரை ஊராட்சி நிதியில் செலுத்தியுள்ளனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவர் இணைந்து ஊராட்சி நிதியை கையாடல் செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.