அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு ; விழுப்புரம் போலீஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, விவசாயிகள் 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Continues below advertisement
விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்னிந்திய நதிகள் விவசாய சங்கத்தினர் ஃபெஞ்சல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அனுமதியின்றி  அரை நிர்வாணத்தில் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் செய்தனர். 
 
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 80 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்த சவுக்கை கணக்கெடுப்பு மேற்கொள்ளவில்லை பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு அருகிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் ரூ.5 ஆயிரம் வழங்குவதை போல கூடுதலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி,
 
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே அனுமதியின்றி  மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலையில் அரை நிர்வாணமாக படுத்துரண்டு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். 
 
இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் ராஜமன்னார் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அய்யாக்கண்ணு மற்றும் 69 ஆண்கள், 30 பெண்கள் என 100 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
 

ஃபெஞ்சல் புயல் நிவாரணம் 

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்; முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும்;மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கிடவும்; எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கிடவும்;

Continues below advertisement

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்;

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 
Continues below advertisement