விழுப்புரம் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பதவியை இழந்துள்ள பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டி சித்தலிங்கமட திமுக பெண் தொண்டர்கள் 108 பால்குடம் எடுத்து  சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனையை மேல் முறையீடு செய்வதற்காக சென்னை நீதிமன்றதம் ஒரு மாதம் தீர்ப்பையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் அமைச்சராக வேண்டுமான விழுப்புரத்தில் உள்ள திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்திலிங்கமட  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உமா மகேஸ்வரி சதீஷ்குமார் தலைமையில் திமுக தொண்டர்கள் மீண்டும் பொன்முடி அமைச்சராக வேண்டி 108 பால் குடங்கள் எடுத்தனர்.  பொன்முடி அமைச்சராக வேண்டி பெண்கள் திமுக தொண்டர்கள் பால்குடத்தினை ஊர்வலமாக எடுத்து சென்று விசாலாட்சி சமேத விநாயகர் பாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து  சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.




பொன்முடி வழக்கு 


2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.75 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  மேலும் அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.


கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கியது. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிவ்ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தன்டனை விதித்து நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ள நிலையில், சொத்து முடக்கத்தை விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில்  நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்திப்பு..


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்துள்ளார். தீர்ப்பு வந்த போது முதலமைச்சர் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் சென்னை வந்த நிலையில் பொன்முடி சென்று சந்தித்துள்ளார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் என்ற முறையிலும், சட்டதுறை அமைச்சர்  ரகுபதி, கட்சியின் முக்கிய அதிகாரிகள் பொன்முடியை நேரில் சந்தித்தனர் கட்சி உடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கட்சியின் மூத்த துணைப்பொதுச் செயலாளருக்கு இது போன்ற தீர்ப்பு வந்திருப்பது தொடர்பாகவும் முதலமைச்சரிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்,  5 முறை சட்டமன்ற உறுப்பினர் என முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.