விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வேளியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). ஆறுமுகத்திற்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர் இவர்களில் நான்காவது பெண்ணான கவுசல்யா சென்னையில் வேலை செய்த போது திருவண்ணாமலை மாவட்டம் கஷ்டம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் தனுஷ்குமார் (4). ஜென்விஷா(1). இரண்டு குழந்தைகள் உள்ளனர். கேசவனுக்கு அதிகப்படியான மதுப்பழக்கம் இருந்ததால் மனைவி கௌசல்யாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கௌசல்யா அவருடைய சொந்த ஊரான வேலியந்தல் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.


பெங்களூருவில் வேலை செய்யும் கேசவன் அடிக்கடி வேலியந்தல் கிராமத்திற்கு சென்று மனைவி, குழந்தைகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் வேலியந்தல் கிராமத்திற்கு வந்த கேசவன் அதிகப்படியாக மது குடித்து விட்டு நள்ளிரவு மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார் கேசவன். அப்போது மாமனார் ஆறுமுகம் கேசவனை மறித்து, குழந்தைகளை விட்டுச்செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேசவன் அருகில் இருந்த கட்டையால் ஆறுமுகத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.


இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர் ஆறுமுகத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கஞ்சனூர் காவல் துறையினர், கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப சண்டையில் மாமனாரை மருமகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பகுதியில் பெயரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.