விழுப்புரம் : கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீர் பருகுவதோடு, அவசிய காரணங்கள் இன்றி பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது., கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நம்மையும் நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும்.
தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் பருகுவதை தவிர்த்து அதிக அளவில் மோர். இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் இதர பழச்சாறுகள் ஆகியவற்றைப் பருகலாம்.
குறிப்பாக, அவசிய காரணங்கள் இன்றி வெயில் அதிகம் உள்ள நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். மேலும் கோடைகாலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மிக முக்கியமாக திறந்தவெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தித் துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமான வேலை செய்யும் பொழுது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள். முதியவர்கள். நாற்பட்ட நோயாளிகள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் கோடை வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெயிலுக்கு சுலபமாக பாதிப்படையக்கூடிய மேலே குறிப்பிட்டுள்ள நபர்களை கட்டாயம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும் போது கலைப்பு. தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிகளவு தாகம். தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள நபரை உடனடியாக உதவிக்கு அழைத்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை நாட வேண்டும். குறிப்பாக இத்தகைய நபர்களுக்கு வெயில் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பிற்கு ஆஸ்பிரின் மற்றும் பாரசிட்டமால் மாத்திரைகள் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.
மேலும், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்ப்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களை கொடுத்து பராமரித்திடவும் கோடை காலத்தில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கால்நடை துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளையும் கடைப்பிடி வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மருத்துவ உதவிகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷே ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.