விழுப்புரம்: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதன் மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது, காணை ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரமூர் கிராமத்தில் மயானப் பகுதியில் மக்கள் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் ஒரு சாதிய மோதல் பிரச்சனை ஏற்படும் வகையில் கழிப்பறை கட்டடத்தை கட்டிய அரசு அதிகாரிகள் மீதும், ஊராட்சித் தலைவர் மற்றும் செயலாளர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயானப் பகுதியில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை இடித்து, அதனை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, தரையில் அமர்ந்து, திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷின் கையைப் பிடித்து, மேலே எழுந்து போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர்.  அப்போது, ஆத்திரமடைந்த சுபாஷ், காவல் ஆய்வாளர் ஆனந்தனைப் பார்த்து, கோரிக்கைகள் தொடர்பாக, நாங்கள் இரண்டு ஆண்டுகளாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையே உண்டா, இல்லையா? என்றார்.


மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதி என்றும் பாராமல்,  அநாகரிகமாக முறையில் பேசியுள்ளார்.


இதனால், கடுப்பான காவல் துறையினர், மனு கொடுக்கத்தானே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தீங்க. அப்புறம் ஏன்? தரையில் அமர்ந்து போராட்டம் செய்யறீங்க, போராட்டத்தை கைவிட்டு அமைதி அமைதியான முறையில் சென்று ஆட்சியரிடம் மனு கொடுங்க என்று கூறினர். 


இதற்கும் அந்தக் கட்சி நிர்வாகி, மாவட்ட ஆட்சியர் ஒன்னும் எங்களுக்கு எஜமானர் இல்லை, எங்களுக்கு சேவகம் செய்கிற வேலைக்காரன் என்று ஒருமையில் பேசியதோடு, இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்துக்கிட்டே இருக்கிறோம்.  ஆனால், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்புறம் ஏன்? நாங்க மனு கொடுக்கணும் என்றார். 


இதனைத் தொடர்ந்து, நாங்க போயிட்டு மாவட்ட ஆட்சியரை பார்க்க மாட்டோம். அவரு வேணாம் இங்கு வந்து எங்கள பார்க்கட்டும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று போலீசார் கூற, அதற்கு அந்தக் கட்சி நிர்வாகி, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கன்னு நாங்க உங்க கிட்ட கேட்டோமா?, நீங்க எதுக்கு வந்தீங்க. இங்க என்ன கலவரமா நடக்குது, உங்களுக்கு என்ன வேலை என்றும் கூறினார்.


இந்த நிலையில், போராட்டக்காரர்களை போலீசார் சமாதானப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நேரில் வந்து, போராட்டக்காரர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அவரது பேச்சுக்கு கட்டுப்பட்ட போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக, அலுவலகத்தின் உள்ளே சென்றனர். மனு வாங்கும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாமல் வேறொரு அதிகாரி இருந்ததால், இவர்கள் அங்கேயும் மனு அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் வரும் வரை காத்திருந்தனர். 


இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வந்ததும் அவரிடம் சென்று மனு அளித்து, தங்களுடைய கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். மாவட்ட ஆட்சியரிடமே மயானப் பகுதியில் கழிப்பறை கட்டடம் கட்டிய அதிகாரிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மிகவும் சவடலாகவும் சத்தமாகவும் பேசினர். இருப்பினும், மாவட்ட ஆட்சியர் மிகவும் பொறுமையுடன் இருந்து, அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, அங்கிருந்த உரிய அதிகாரியை அழைத்து கட்டளையிட்டார்.