விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.


இந்நிலையில், திமுகவை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது என்பதற்காக பொதுமக்கள் அனைவரையும் பணம் கொடுத்து வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்ததாக கூறியும், அவர்களை உடனடியாக கடையம் கிராமத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் அருள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர், திமுகவை கண்டித்து அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதே போன்று கடையம் பகுதியில் பாமக அன்புமணி ராமதாஸ் வருகைக்கு முன் திமுகவினர் மக்களை பணம் கொடுத்து திமுக கட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தாக கூறி பாமகவினரும் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரை கலைத்தனர். இதனால் சாணிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.