விழுப்புரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது பிரிவை கட்சி பாகுபாடியின்றி அவர் மீது உள்ள அன்பால் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், திண்டிவனம், வானூர், மைலம், ஒலக்கூர், விழுப்புரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 




தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth), கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றும் வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது.  தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக மியாட் மருத்துவமனை, தேமுதிக தலைமைக்கழகம் ஆகியவை விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தனர். 


தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.


தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் (Captain Vijayakanth) மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த மறைவு செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் - சுதீஸ் அறிவிப்பு



தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.