காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், மயிலாடி, அஞ்சுகிராமம், கொட்டாரம், தோவாளை, திட்டுவிளை, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல், திருவாரூர்,காரைக்கால் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


12 மாவட்டங்களில் கனமழை:


மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


12.11.2023 முதல் 14.11.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.






அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை எச்சரிக்கை:


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர், மதுராந்தகம், திருக்கழுகுன்றம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோன்று திருப்பூர் மற்றும் பொன்னேரி பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வைகை அணை நிரம்பியது:


வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேனியில் உள்ள, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அதன்படி, விநாடிக்கு 2,271 கன அடி தண்ணீரானது அணையின் 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி ராமநாதபுரம், சிவகங்கை,  திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3 கட்டங்களாக வெள்ள அபார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வெள்ள அபாய எச்சரிக்கை:


இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த கரையோரப் பகுதி மக்கள் பாதுகப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவே, கடக்கவோ வேண்டாம் என்றும்  பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. 64 ஆண்டுகளை கடந்த இந்த வைகை அணை 33-வது முறையாக நிரம்பியுள்ள நிலையில், பெரியார் பாசன பகுதிக்காக விநாடிக்கு 900 கனஅடி நீர் இன்று திறக்கப்படுகிறது.