விழுப்புரம்: பெரியார் இல்லையென்றால் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்க முடியாது என்றும் பெரியார்  சிலை அகற்றப்படுமென கூறியதை அண்ணாமலை மாற்றிக்கொள்ள வேண்டுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையேயான நாடக வசனங்கள் ஒப்புவித்தல், கவிதைகள், பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி திமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி லட்சுமணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வழியிலையே திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதற்காக மாணவர்களிடையே பேச்சுபோட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். கல்வி வளர்ச்சிக்காவும், சுகாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும், பள்ளிக்கூடங்கள் குறைவாக இருந்த காலங்கள் மாறி ஊருக்கு ஊரு பள்ளி கூடங்கள் என்ற நிலையை கொண்டுவந்தது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் மாணவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை


அதனை தொடர்ந்து  பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றப்படுமென அண்ணாமலை தெரிவித்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு  பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி பெரியார் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அண்ணாமலை ஐ பி எஸ் ஆக இருந்ததற்கு காரணம் பெரியார் தான் அரசியலுக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறினார்.


வட இந்தியாவில் உள்ளவர்கள் கூட பெரியாரை ஏற்று கொண்டுள்ள நிலையில் பெரியார் குறித்து மனப்பூர்வமாக அண்ணாமலை பேசி இருக்க மாட்டார் டிவியில் செய்தி வர வேண்டும், தான் இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அவர் பேசியிருப்பார் என்றும் அதனை அவர் மாற்றி கொள்ள வேண்டும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆளுநர் தான் பேசுவதை தான் பிறர் கேட்க வேண்டும் என்றும் நினைப்பதாகவும் நாங்கள் கூறிவதை அவர் கேட்க என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.