கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் சென்றது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பபட்டு கரைபுரண்டு ஓடியது. இதில் ஆற்றின் மொத்த கொள்ளளவான 1.80 லட்சம் கன அடியில் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடலூர் ஆல்பேட்டை, திடீர்குப்பம், ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரிய கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, குமரப்பன் நகர், தியாக நகர், வேலன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று தங்கியுள்ளனர். 



 

மேலும் கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சுமார் முப்பத்தி இரண்டு சிறுமிகள் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தத்தளித்தனர்.  இது பற்றி தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் படகுடன் சென்று விடுதியில் சிக்கிய 31 மாணவிகள், நான்கு உதவியாளர்கள் உள்பட அனைவரையும் படகு மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர். பின்னர் அவர்கள் வன்னியர் பாளையத்தில் உள்ள முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதே போல் கடலூர் பெரிய கங்கனா குப்பத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மூன்று வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

 



 

மேலும் அப்பகுதியில் வசித்த சுமார் 500 பேர் கடலூரில் உள்ள முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் உடைப்பு ஏற்பட்டு குண்டு உப்பளவாடி அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளித்தனர் இதனை தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் 4 படகுகளுடன் சென்று தத்தளித்த மக்களை படகுகளுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர் மேலும் இதே போல் உச்சிமேடு ஞான மேடு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்கள் பெருமளவு வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.



 

மாவட்ட நிர்வாகம் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் ஆறுகளை கண்காணித்து வந்தாலும் நேற்று கிருஷ்ணகிரி விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது ஆனால் நேற்று கரையோர உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யாததால் தற்போது குடியிருப்புகள் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர்.

 

நேற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக எடுத்து வைத்துவிட்டு முகாம்களில் தங்கி இருந்தனர் ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் மீது அலட்சியத்தின் காரணமாக தற்போது கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது மக்களும் சிக்கி தவித்து வருகின்றனர் உடனே மாவட்ட நிர்வாகம் அனைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்டு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அவர்களுக்கு தேவையான உணவு அத்தியாவசிய தேவைகளை முகாம்களில் கொடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. 1973 ஆம் ஆண்டு இதே போல் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆண்டுதோறும் கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படக்கூடிய மாவட்டம் என்பதால் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.