பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில் கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் புகுந்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 82.45 கோடி மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வே கணேசன் ஆகியோர் வழங்கினார்.

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,  “தமிழகத்தில் 17 மாவட்டத்தில் கிட்டத்தட்ட 5600 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகையில் பன்னீர் கரும்புகள் சேர்க்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பொங்கல் பரிசு அறிவித்த நிலையில் தற்போது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப 2 கோடியே 16 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட உள்ளது. 

 

பன்னீர் கரும்பு அரசு கொள்முதல் செய்வதில் இடைத்தரங்களை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்கள். பன்னீர் கரும்புகள் எந்தெந்த பகுதியில் கொள்முதல் செய்யப்படும் என்பதை கூட்டுறவுத் துறை, வேளாண் துறை முடிவு செய்யும் இதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை செய்வார். பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் புகுந்தால் நிச்சயமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

மேலும், “என்எல்சி விவகாரத்தில் போராட்டம் செய்யக்கூடிய இடத்தில் திமுக இல்லை, எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கிறதோ அப்போது மட்டுமே என்எல்சி நிலம் கொடுத்தது தொடர்பாக, என்எல்சி தொழிலாளர் தொடர்பாக போராட்டம் நடைபெறுகிறது. 

 

திமுக ஆட்சி காலத்தில்தான் 6 லட்சம் இழப்பீடு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு தொகையை 15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. என்எல்சி நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பு தொகை ஏக்கருக்கு 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இடையில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் என்எல்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதற்கு கூட அனுமதி வழங்காமல் எங்களது குரல்வளை நெறிக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்எல்சி விவகாரம் குறித்து பேசுவதற்கு 3 முறை அனுமதி வழங்கப்பட்டது. என்எல்சி விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் நாங்கள் அல்ல” என தெரிவித்தார்.