புதுச்சேரி: கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டது ஏன்? என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை சுடுகாடு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் காவல் ஆய்வாளர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 55) என்பதும், கடந்த சில ஆண்டுகளாக கிருமாம்பாக்கத்தில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.


இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரை அடித்துக் கொன்றது கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அஜித் (26), திவான், நெல்லித்தோப்பை சேர்ந்த அப்பு (29) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-


கைது செய்யப்பட்ட திவான், கொத்தனார் முருகனுடன் அடிக்கடி சித்தால் வேலைக்கு சென்று வந்தார். அப்போது முருகனுக்கும், திவானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன், திவானை பொது இடத்தில் அசிங்கமாக திட்டியது மட்டுமின்றி சித்தால் வேலைக்கு அழைத்து செல்வதை நிறுத்தியுள்ளார். இதனால் வேலை கிடைக்காமல் சுற்றிய திவான், இதுகுறித்து தனது நண்பரான கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அஜித்திடம் கூறி புலம்பியுள்ளார். இதையடுத்து முருகனை தீர்த்து கட்ட 2 பேரும் திட்டம் தீட்டினர். அதன்படி சம்பவத்தன்று இரவு முருகன் தன்னுடன் வேலைக்கு வந்த நெல்லித்தோப்பை சேர்ந்த அப்புவுடன் சென்று சாராய கடையில் சாராயம் குடித்தார். அப்போது அங்கு வந்த அஜித்தும், திவானும் முருகனையும், அப்புவையும் நைசாக பேசி மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.




பின்னர் அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அஜித்தும், திவானும் சேர்ந்து கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற அப்புவையும் அவர்கள் மிரட்டி முருகன் மீது தாக்குதல் நடத்த கூறியுள்ளனர். 3 பேரும் கட்டையால் அடித்தே அவரை கொன்றுள்ளனர் என போலீசார் கூறினர்.