கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகில் உள்ள எஸ்.புதூா் கிராமத்தில் உள்ள தற்காலிக நேரடி கொள்முதல் மையத்தில், அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தெ.அழகுவேல் (43) என்பவா் நெல் எடுத்துச் சென்று உள்ளார். அப்பொழுது அங்கு பணியாற்றும் பில்கிளர்க் ராமசந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி இருவரும் விவசாயிகளிடம் மூட்டைக்கு 50 ரூபாய் என பணம் கேட்டு விவசாயிடம் 200 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்து உள்ளார். இது குறித்து அழகுவேல் அளித்த புகாரின் பேரில் கடலூா் மாவட்ட லஞ்சம், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளா் என்.தேவநாதன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினாா். பின்னர் அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மறைந்து இருந்து விவசாயி அழகுவேலிடம் 3,300 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பில் கிளார்க் ராமச்சந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

 



 

இதை அடுத்து, அங்கு நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரத்தை லஞ்சம், ஊழல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனா். இந்த நிலையில், லஞ்சம் தொடா்பாக புகாா் தெரிவிக்க விரும்புவோா் கூடுதல் கண்காணிப்பாளரின் 9498110392 என்ற எண்ணில் நேரடியாக புகாா் அளிக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சென்ற வருடா குறுவை பருவத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2021-22 நெல் கொள்முதல் பருவத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டது.

 



 

தற்போது கடலூர் வட்டத்தில் நடுவீரப்பட்டு, பட்டீஸ்வரம், சி.என்.பாளையம் ஆகிய 3 கிராமங்களிலும்,புவனகிரி வட்டத்தில் பூவாலை, கொளக்குடி ஆகிய 2 கிராமங்களிலும், விருத்தாசலம்வட்டத்தில் வயலூர், சத்தியவாடி,ராஜேந்திரப்பட்டினம், கொடுமனூர், இருப்புக் குறிச்சி, கம்மாபுரம், தொரவளுர், கோ.மங்கலம் ஆகிய 8 கிராமங்களிலும் திறக்கப்பட்டன. இதே போல் முஷ்ணம் வட்டத்தில் வெங்கிடசமுத்திரம், எசனூர், கள்ளிப்பாடி, மேலப்பாளையூர், கார்மாங்குடி, சி.கீரனூர், காவனூர், தொழுர், நெடுஞ்சேரி, குணமங்கலம், முஷ்ணம், அம்புஜ வள்ளிபேட்டை, கானூர், எம்.பி.அக்ராகார, பேரூர் மற்றும்வேப்பூர் வட்டத்தில் சேதுவராயன்குப்பம், சிறுவரப்பூர், பனையஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.