ஜி20 மாநாட்டுக்காக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஜி20 மாநாடு வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயலர் ராஜீவ் வர்மா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், ஜி20 தொடர்பு அதிகாரியுமான வல்லவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு செயலர்கள் ராஜூ, ஜவஹர், முத்தம்மா, உதயக்குமார், குமார், நெடுஞ்செழியன், ரிஷிதா குப்தா, ஆரோவில் பவுண்டேஷன் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி, டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ஜி20 தொடர்பு அதிகாரியான ஆட்சியர் வல்லவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


புதுச்சேரியில் வருகிற 30, 31-ந் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. கூட்டத்தில் 20 உறுப்பினர் நாடுகளை சேர்ந்த பிரநிதிகளும், 20 உறுப்பினர்கள் அல்லாத நாட்டு பிரநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் 30-ந் தேதி புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். இந்த வாய்ப்பினை புதுச்சேரி கலாசாரம், சுற்றுலா, கலை வடிவங்கள் அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பிரநிதிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் அவசர கால மருத்துவ வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுவையை அழகு மிளிர காண்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி வரலாற்று பிரதான சின்னங்கள், தலைவர்கள் சிலைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. இதில் ஜி20 சின்னத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் சுய உதவிகளுக்கு கோலப்போட்டிகள் நடத்தப்படுகிறது.


ஜி20 மாநாட்டையொட்டி புதுவை மற்றும் காரைக்காலில் தலா 20 நீர் நிலைகளை தேர்வு செய்யப்பட்டு சுற்றுபுறத்தை பாதுகாக்கும் வகையில் மரங்களை நட்டு பாதுகாத்து ஜி20 பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.1.25 கோடி ஒதுக்கீடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் மாநாட்டு மையத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


அனைத்து துறைகளும் தங்களின் அலுவல் தொடர்பான அனைத்து பரிமாற்றங்களிலும் ஜி20 மாநாட்டின் சின்னம் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள ரசீதில் சின்னம் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி மத்திய வெளியுறவு துறை ஏற்றுக்கொண்டுள்ளது. ஜி20 மாநாட்டில் மேற்கொள்ளப்படும் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகளுக்காக ரூ.1 கோடியே 25 லட்சம் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறினார்.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.